Wednesday, 17 June 2020

தேவனுடைய திட்டம்


*தேவனுடைய வழிகள்*
====================

*"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல. உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்"*
( ஏசாயா 55 : 8 ).

இளைஞன் ஒருவன், மலை உச்சியிலிருந்து கீழே விழுந்தான். பள்ளத்தாக்கிற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்று அவன் நினைத்தான். ஆனால் அவன் ஒரு மரத்தின் மீது போய் விழுந்தான். அதிலிருந்த ஒரு கொப்பைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தான். இருட்டான நேரம் என்பதால், கீழே இருப்பதை அவனால் பார்க்க முடியவில்லை. அருகில் யாராவது இருந்தால் தன்னைக் காப்பாற்ற வருமாறு சத்தமாக கூப்பிட்டான். அவன் சத்தம் கொடுத்த அடுத்த நிமிடத்தில், "நான் உன் தேவன், உன்னைக் காப்பாற்றும்படி உன் அருகில் இருக்கிறேன்" என்று அவனுக்கு ஒரு சத்தம் கேட்டது. அவனுக்கு மிகுந்த சந்தோசமும், நிம்மதியும் வந்தது. பரவாயில்லை! இவ்வளவு ஆபத்தான நேரத்திலும், கர்த்தர் தன்னை காப்பாற்றும்படி வந்திருக்கிறார் என்று நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டான். உடனே அந்த இளைஞன், "தேவனே! என்னைக் காப்பாற்ற உங்களால் முடியுமா?" என்று அவன் கேட்டான். "ஆம். உன்னை என்னால் காப்பாற்றமுடியும், அதற்காகவேதான், நான் இங்கு வந்திருக்கிறேன்" என்று தேவன் சொன்னார். அதற்கு அந்த இளைஞன், "மிக்க நன்றி, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு தேவன், "உன் இரு கரங்களையும் வைத்து, கொப்பை இறுக பற்றிக் கொண்டிருக்கிறாய்
அல்லவா? அதனை இப்போது விட்டு விடு" என்றார். இப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்க்கவே இல்லை. தன் கைகளை விட்டால், கீழே விழுந்து, பள்ளத்தாக்கில் மரித்துப் போவோம் என்று அவன்  நினைத்ததால், தேவன் சொன்னதை அவன் செய்யாமல், வேறு யாராவது தனக்கு உதவி செய்ய மாட்டார்களா? என மீண்டும் சத்தமிட ஆரம்பித்தான். உண்மையிலேயே, அவன் கையை விட்டிருந்தால், பத்திரமாக ரோட்டருகில் விழுந்திருப்பான். ஏனென்றால் அவன் தொங்கிக்கொண்டிருந்த மரம் பள்ளத்தாக்கில் இல்லை. ரோட்டோரமாகவே இருந்தது!

நாமும் பலசமயங்களில், தேவனை, அவரது உதவிக்காக நாடுகிறோம். ஆனால் அவர் தரும் வழியில், அவரிடமிருந்து, நாம் உதவிகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவதில் நமது மூளைக்கு எட்டியபடிதான், தேவன் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அவருடைய வழிகளையும், திட்டங்களையும் நாம் ஏற்றுக் கொள்வதி்ல்லை! தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளை விட எளிதாகத் தெரிந்தாலும், அவை உயர்ந்தவை. சிறந்தவை. ஆகவே, தேவன் நம் தேவைகளை சந்திக்க வைத்திருக்கும் வழிகளை, நாம், நம்ப வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை சீரிய படை தளபதி நாகமான், தன்னுடைய குஷ்டரோகத்தை நீக்கிக்
கொள்ளும்படியாக, இஸ்ரவேல் தேசத்திலிருந்த எலிசாவிடம்
வந்தான். எலிசா, தன் தேவனுடைய நாமத்தை தொழுது, தன் கையினால் குஷ்டம் இருந்த இடத்தை தடவி விடுவார், அப்பொழுது தனக்கு சுகம் கிடைக்கும் என நாகமான் நினைத்திருந்தான். ஆனால், எலிசாவோ, நாகமான் சற்றும் எதிர்பாராதவிதத்தில், நீ போய், யோர்தான் நதியில் ஏழு தரம் ஸ்நானம்பண்ணு என்று சொல்லி அனுப்பி விட்டார். ஆனால், நாகமான் அதை கொஞ்சமும் விரும்பவில்லை. யோர்தானை விட நல்ல நதிகள் எங்கள் நாட்டில் இருக்கிறது என்று கோபத்தோடு, தன் நாட்டிற்கு திரும்ப நினைத்தான். ஆனால்  அவனோடு வந்திருந்தவர்களின் வற்புறுத்தலின்பேரில், தீர்க்கதரிசி சொல்லியபடி, யோர்தான் நதியில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணினான். அப்பொழுது அவன் மாம்சம் மாறி, ஒரு குழந்தையின் மாம்சம் போல் ஆனது (2 இராஜா 5 : 1 -- 14 ).

*தேவனுடைய வழிகளை நம் வாழ்வில் ஏற்றுக் கொண்டால், மிகுந்த ஆசீர்வாதம் நமக்கு உண்டாகும். நம்முடைய வழிகளை விட தேவனுடைய வழிகள் உயர்ந்தவைகள். நம் வழிகள் தேவனுடைய வழிகள் அல்ல.*

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பராக. ஆமென்.

No comments:

Post a Comment

வசனம்